Political ·

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறினால் கைதுகள் தொடரும் : படகுகள் பறிமுதல் செய்யப்படும் - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறினால் கைதுகள் தொடரும் : படகுகள் பறிமுதல் செய்யப்படும் - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

July 02 (Citizen.lk News) - இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறினால் கைதுகள் தொடரும்; படகுகள் பறிமுதல் செய்யப்படும். இவ்விடயத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்.

கொழும்பில் செவ்வாய்க்கிழமை (1) அமைச்சில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போது இதனை தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,  

இந்திய மீனவர்களின் அத்துமீறலானது எமது மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கே பாதகமாக அமைந்துள்ளது. இது தொடர்பில் இந்திய தரப்புக்கும் தெரிவித்திருந்தோம். 

கடந்த மூன்று மாதங்களாக இந்திய மீனவர்களின் பிரச்சினை இருக்கவில்லை. தற்போது மீண்டும் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைய ஆரம்பித்துள்ளனர். அவர்களை நாம் கைது செய்தோம்.  

இந்திய மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் மயிலிட்டி துறைமுகத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளன. அவை அரசுடமையாக்கப்பட்டுள்ளன.

தமிழக மீனவர்கள் எமது கடற்பரப்புக்குள் அத்துமீறுவதை நிறுத்த வேண்டும். அவ்வாறு இல்லையேல் கைதுகள் தொடரும். படகுகள் பறிமுதல் செய்யப்படும். உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.  

மீனவர் பிரச்சினை தொடர்பில் இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கையிலும் இறங்கியுள்ளோம். கடற்படைக்கு கூடுதல் வளங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்திய மீனவர்களின் அத்துமீறல் தடுத்து நிறுத்தப்படும். இலங்கை கடற்படையினர் மிகவும் கட்டுக்கோப்பாகவே நடந்துவருகின்றனர்.

இந்திய மீனவர்களின் ரோலர் படகுகளால்தான் இலங்கை கடல்வளம் நாசமாக்கப்பட்டுள்ளது. இந்நிலைமை தொடர்ந்தால் இலங்கை கடற்பரப்பு கடல் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது என்றார்.

Read next

நுவரெலியா, இலங்கை — பிரித்தானியாவில் ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஒன்றியங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நிகழ்த்தவிருந்த உரைகள் புலம்பெயர் அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக ரத்து
இலங்கை - ஐரோப்பிய ஒன்றிய உறவுகளை வலுப்படுத்துவது குறித்து அமைச்சர் விஜித ஹேரத்துடன் ஐரோப்பிய பிரதிநிதி பேச்சு!